கஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு கஷ்டம்.
வண்ணத்துப் பூச்சியின் கூடுடைக்கும் போராட்டத்தைப் பார்க்கும் போது,
“அடடா.. எவ்ளோ கஷ்டப்படுது” என மனசில் சிந்தனை ஓடும் இல்லையா ?
அந்தக் கடினமான வேலை இல்லாவிட்டால் வண்ணத்துப் பூச்சி ஆரோக்கியமாய் வெளிவர இயலாது என்பது தானே உண்மை !
நமது கஷ்டங்கள் நீண்டகாலம் தொடர்ந்தால்,
அதன் எல்லையில் மகிழ்ச்சியும் அந்த அளவுக்குப் பெரியதாக இருக்கும் என்பது பெரியவர்களின் மொழி.
இறுகி இறுகிக் கிடக்கும் கரி தானே வைரமாய் மாற முடியும் !
எரிவதற்குப் பயன்படுவதா ?
இல்லை வைரமாய்த் திரிவதற்குப் பயன்படுவதா என்பதை சோதனைகள் தான் முடிவு செய்கின்றன.
ஆகாய விமானத்தின் உடலைப் பாருங்கள். எவ்வளவு உறுதியாய் இருக்கிறது. அதை அடைய அது பல கஷ்டங்களைத் தாண்டி வர வேண்டியிருக்கிறது. அதிக பட்ச வெப்பத்தில் அதைப் போடுவார்கள். பின் அதிகபட்சக் குளிரில் போடுவார்கள்.
இப்படிப் பல முறை செய்து அந்த உலோகமானது எந்தக் காலநிலையையும் தாக்குப் பிடிக்கும் வகையில் மாற்றுவார்கள். அப்படி கடினப் பாதையில் செல்லும் உலோகம் தான் உயர உயரப் பறக்கும்.
அப்படிப் பட்ட சிக்கலைச் சந்திக்காத உலோகம் அடுப்படியில் பாத்திரமாக உருமாறிவிடும் !
ஒவ்வொரு கடினப் பாதையும் நமக்கு நன்மைகளைத் தருவது போல,
நல்ல படிப்பினைகளையும் தருகிறது.
“அனுபவம் ரொம்ப இருக்கு” என ஒருவரைப் பார்த்து எப்போது சொல்வோம் ?. அவர் இத்தகைய சிக்கல்களில் நுழைந்து நுழைந்து வெளியேறி வரும்போது தானே ?
வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் ரசித்துச் செய்யும் மனிதர்கள் பெரும்பாலான கடின நிமிடங்களை இலகுவாகத் தாண்டி விடுகிறார்கள்.
“காலைல இருந்து நைட் வரை வேலையைக் கட்டிட்டு அழ வேண்டியிருக்கு”
என நினைக்காமல்
காலை முதல் மாலையிலான நமது வாழ்க்கை அது, அதை ரசித்துச் செய்வோம்
என நினைத்தால் அந்த கடின நிமிடம் உங்களுக்குப் பிடித்தமானதாய் மாறிவிடும்.
No comments:
Post a Comment