தேர்வு பயமே கிடையாது..!
நம்ம ஊரில் எத்தனை முறை தேர்தலில் தோல்வியடைந்தாலும் சளைக்காமல் தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் போல,
தேர்வு என்று வந்து விட்டால் நம்ம சரணும் ஒரு கைபார்த்துடுறேனு கிளம்பிடுவார்..!
அப்படி,
தேர்வு என்றால் சாதாரண விஷயம். தோல்வியடைந்தால் அடுத்த முயற்சி என போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்று 77 வயது பெரியவர் ஒருவர், 47வது முறையாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிக் கொண்டிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் கோகார் கிராமத்தை சேர்ந்தவர் சிவ் ஷரண் யாதவ். 77 வயது நிரம்பிய முதியவர்.
கடந்த 1968-ம் ஆண்டு முதன் முறையாக 10-ம் வகுப்பு தேர்வு எழுத ஆரம்பித்தார். ஆனால் இதுவரை பாசாக முடியவில்லை. தற்போது 47-வது முறையாக ஷிவ் சரண் யாதவ் 10-ம் வகுப்பு தேர்வினை எழுதுகிறார். ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வியடைந்து விடுவது ஷிவ் சரணின் குறையாக இருக்கிறது.
ஆனாலும் விடாமல் முயற்சிப்பதும் ஷிவ் சரணின் முடிவாகவும் தெரிகிறது.
இது குறித்து அவர் கூறுகையில்,
'' ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பாடத்தில் கோட்டை விட்டு விடுகிறேன். அறிவியலிலும் கணக்கிலும் பாஸ் செய்தால், இந்தியிலும் ஆங்கிலத்திலும் பெயிலாகி விடுகிறேன். கடந்த 1995-ம் ஆண்டு கணித்தை தவிர அனைத்து பாடத்திலும் பாஸ் செய்து விட்டேன். எனது இந்த முயற்சியை எங்கள் கிராமத்தினர் கை விட்டுவிடக் கூடாது என கூறியிருக்கின்றனர்.
அதனால் சில ஆசிரியர்களிடம் டியூசன் சென்றுள்ளேன். இந்த முறை அனைத்து பாடத்திலும் நிச்சயம் பாஸாகி விடுவேன்'' என்றார்.
ஷிவ்சரண் யாதவ் பிறந்த 2 மாதத்தில் தாயை பறிகொடுத்தவர். சரணுக்கு 10 வயதாகும் போது தந்தை இறந்து போனர். அவரது தாய்மாமா மற்றும் கிராமத்தினர்தான் அவரை வளர்த்துள்ளனர். கோகார் கிராமத்தில் பாரம்பர்ய வீட்டில் வசித்து வருகிறார். முதியவர்களுக்கான பென்ஷன் அவருக்கு வருகிறது. அதனை வைத்துதான் வாழ்க்கை ஓடுகிறது. எனினும் 10-ம் வகுப்பை பாஸ் செய்வதுதான் தனது ஒரே இலக்கு என ஷிவ் சரண் போராடி வருகிறார்.
ஒவ்வொரு முறை தேர்வு தொடங்கும் காலத்தில் 15 வயது சிறுவன் தேர்வு எழுதப் போகிறானோ இல்லையோ நம்ம சரண் முதல் ஆளாக தேர்வு மையத்துக்கு கிளம்பிவிடுவார்.
தேர்வில் பாசாக வேண்டி, கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்துவதும் சரணின் வழக்கம். கிராமத்தினர் சிலர் அவரை கிண்டல் செய்தாலும், பலர் அவருக்கு புத்தகங்கள், பேனாக்களை வழங்கி உற்சாகப்படுத்துகின்றனராம்.
இந்த முறையாவது ஷிவ் சரணுக்கு விநாயகர் துணை இருப்பாரா என்று பார்ப்போம்!

No comments:
Post a Comment