சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார்
சென்னை, அண்ணா நகரில் உள்ள சாலையோர புத்தகக் கடையில் ஒரு வயதானவரைச் சந்தித்தேன். குழந்தைகள் புத்தகமாகத் தேடி வாங்கிக் கொண்டிருந்தார். யாருக்காக அவற்றை வாங்குகிறார் என அறிந்துகொள்ள அவருடன் உரையாடத் தொடங்கினேன்.
''என்னுடைய பேரனுக்குத் தினமும் புத்தகம் படித்துக் காட்டுகிறேன். அதற்காகத்தான் இந்தப் புத்தகங்கள்'' என்றார். ''பேரனுக்கு எத்தனை வயது?'' ''எட்டு வயது நடந்து கொண்டிருக்கிறது. அவனுக்குத் தமிழில் வாசிக்க வரவில்லை. நான்தான் படித்துக் காட்டுகிறேன். தினமும் ஒரு மணி நேரம் படித்துக் கதைகள் சொல்கிறேன். இந்தக் கதைகளைப் படிக்கப் படிக்க நானே குழந்தையாகிப் போனது போல சந்தோஷமாக இருக்கிறது.''
''உங்கள் மகன் என்ன செய்கிறார்'' என்று கேட்டேன். ''அமெரிக்காவில் கணிப்பொறித் துறையில் வேலை செய்கிறான். பேரனும் அங்கேதான் இருக்கிறான்'' என்றார்.
''அமெரிக்காவில் உள்ள பேரனுக்காகச் சென்னையில் இருந்து கதைகளைப் படித்துக் காட்டுகிறீர்களா…'' என வியப்போடு கேட்டபோது அவர் சொன்னார்:
''அமெரிக்காவில் உள்ள பேரனுக்காகச் சென்னையில் இருந்து கதைகளைப் படித்துக் காட்டுகிறீர்களா…'' என வியப்போடு கேட்டபோது அவர் சொன்னார்:
''அதுதான் டெக்னாலஜி வளர்ந்துவிட்டதே, இதில் என்ன சிரமம்? என்னுடைய லேப்டாப்பில் ஸ்கைப் இருக்கிறது. கேமரா முன் அமர்ந்து கதை சொல்கிறேன், பேரன் அமெரிக்காவில் இருந்து தினமும் இரவு 8 மணிக்கு அழைப்பான். நமக்கு அது காலை நேரம். இருவரும் கதைகள் பேசுவோம், இதனால் அவன் நன்றாகத் தமிழ் பேசுகிறான், ஒய்வு பெற்ற எனக்கும் மனது சந்தோஷமாக உள்ளது.
சில நாள் கதை படிக்க வேண்டாம் என்று சொல்வான், அன்றைக்குப் பாடல்கள் படித்துக் காட்டுவேன், சில சமயம் விடுகதை, பழமொழிகள் கூடச் சொல்வதுண்டு. எந்தக் காரணம் கொண்டும் வீட்டில் தமிழ் பேசுவது நின்று போகக்கூடாது. அதை ஒவ்வொருவரும் கடமையாகச் செய்ய வேண்டும். என்னாலான சிறிய முயற்சி இது. விருப்பத்தோடு செய்து கொண்டிருக்கிறேன்'' என்றார்.
எத்தனையோ பேரின் பிள்ளைகள், பேரன்கள் அயல்நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களில் எத்தனைப் பேருக்கு இப்படிக் கதை படிக்கும் தாத்தா கிடைத்திருக்கிறார்? எத்தனை பேரன், பேத்திகள் தமிழில் கதை கேட்க ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தமிழை வளர்ப்பதற்கு எவ்வளவு எளிய, அருமையான முயற்சி இது. அவரைப் பார்க்கும்போது பெருமிதமாக இருந்தது!
நேரம் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான கதைகளைப் படித்தோ, தெரிந்த கதைகளைச் சொல்லியோ யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யலாம். 10 பேர் தினமும் ஒரு கதை வீதம் பதிவேற்றம் செய்தால்போதும். ஒரு வருஷத்துக்குள் 3,650 கதைகள் இணையத்தில் பதிவேற்றமாகிவிடும்.
அதன் பிறகு உலகின் எந்த மூலையில் தமிழில் கதைகள் கேட்க விரும்புகிற குழந்தை இருந்தாலும் யூ டியூப் வழியாக இந்தக் கதைகளைக் கேட்கலாம்தானே?!
No comments:
Post a Comment