Sunday, 3 July 2016

இனிது இனிது வாழ்தல் இனிது!


உங்கள் குழந்தைப் பருவத்தில் பச்சைக் குதிரையை தாண்டி விளையாடிய அனுபவம் உண்டா? ஒருவர் குனிந்து கொள்ள, இன்னொருவர் ஓடி வந்து குனிந்திருப்பவரின் முதுகைத் தாண்டி குதிக்கிற அந்த விளையாட்டு எத்தனை சுவாரஸ்யமானது! தூரத்திலிருந்து ஓடி வருகிற நபர், எங்கே உங்களைத் தாண்ட முடியாமல் போய் தோற்றுவிடுவாரோ என்கிற பயத்திலும் பதை பதைப்பிலும், அவர் நெருங்கி வரும் போது, இன்னும் கொஞ்சம் குனிந்து நட்பை ஜெயிக்க வைத்த அனுபவம் பலருக்கும் இருக்கும். விளையாட்டில் ஜெயிக்க வைத்த அந்த மனோபாவம், வாழ்க்கையை ஜெயிக்கவும் உதவும். எப்படி என்கிறீர்களா? கணவனோ, மனைவியோ – இருவரில் யார் அவரவர் துறையில் உயரம் தொட விரும்புகிறாரோ, அவருக்கு இன்னொருவர், குனிந்து மேலே உயர உதவலாம். அதனால் என்ன பலன்? இருவரும் ஒருவரை ஒருவர் இன்னும் அதிகம் நேசிக்க முடியும். ஒருவரை ஒருவர் ஆகர்ஷிக்க முடியும். மகிழ்ச்சியைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ள முடியும். இருவருமே இதை காதலுடன் செய்கிற போது, இருவருமே மிகச்சிறந்த நபர்களாக பரிமளிக்க முடியும். நீ எப்பவுமே இப்படித்தான். உன்னால இதையெல்லாம் பண்ணவே முடியாது. நீ எதுக்குமே லாயக்கில்லை’ என எதற்கெடுத்தாலும் மண்டையில் குட்டாமல், விமர்சிக்காமல், அவர்கள் விரும்பிய இடத்தை அடைய உங்களால் முடிந்த அளவு ஊக்கம் கொடுங்கள். பச்சைக்குதிரை விளையாட்டு ஆடுவது சுலபம். ஆனால், அந்த டெக்னிக்கை வாழ்க்கையில் பின்பற்ற, சில அடிப்படை குணங்கள் அவசியம். * அதில் முதன்மையானது பொறுப்பு. நமது வாழ்க்கையில் எப்போது என்ன கஷ்டம், துன்பம் வந்தாலும், அதற்கு அடுத்தவரை மிகச்சுலபமாக காரணம் காட்டி விடுகிறோம். நமது வாழ்க்கையில் நிகழ்கிற எல்லாவற்றுக்கும் நாமே பொறுப்பு என்கிற பக்குவம் வந்தால், துணையை கைதூக்கி விடுவதில் சிக்கல் இருக்காது. * விளையாட்டோ, வாழ்க்கையோ – உங்கள் எதிராளி தயாராக இருந்தால் மட்டுமே பச்சைக் குதிரையை தாண்ட முடியும். கட்டாயப்படுத்தி குனிய வைப்பதோ, தாண்டச் சொல்வதோ தவறு. விருப்பப்பட்டு செய்கிற எந்த காரியத்திலும் அலுப்பு தட்டுவதில்லை. பச்சைக் குதிரை டெக்னிக்கை உங்கள் வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களுக்குமான ஒரு கொள்கையாக வைத்துக் கொண்டு வாழப் பழகினீர்களானால், அது தரும் ஆனந்த அனுபவத்தை அணு அணுவாக ரசிப்பீர்கள்! பச்சைக் குதிரையை தாண்ட பழகுவோமா? வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க விளையாட்டுக்கே விதிமுறைகள் தேவைப்படுகிற போது, வாழ்க்கை மட்டும் விதிவிலக்கா என்ன?

No comments:

Post a Comment