மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை: வேகமாக உயர்ந்து வரும் அமராவதி அணை
பதிவு: ஜூன் 13, 2016 17:45
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர் வரத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடுமலை:
திருப்பூர் மாட்டம் உடுமலை அருகே அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அமராவதி பழைய ஆயக்காடு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் இந்த அணையை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலவிய கடும் வறட்சியினால் அமராவதி அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் அமராவதி அணையின் நீர்மட்டம் சரிந்தது. மேலும் வறட்சியினால் ஆனைமலை புலிகள் காப்பகத்தின்அடர்ந்து வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளுக்கு தேவையான குடிதண்ணீர் மற்றும் உணவு கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வனவிலங்குகள் குடிதண்ணீர் மற்றும் உணவு தேடி உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு வந்தன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த நில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணை பகுதியில் நிலவி வந்த வெப்பம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மேலும் அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 38.03 அடி. அணைக்கு வினாடிக்கு 132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 7 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
http://www.maalaimalar.com/News/State/2016/06/13174540/1018574/amaravathi-dam-water-level-raised-after-rain-hits.vpf
No comments:
Post a Comment