Friday, 26 February 2016

கல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை..!

கல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் 
பின்லாந்து கல்விமுறை..!
அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்.
ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு
கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான்.
அந்த நேரத்திலும்கூட படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே
முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டுக்கும் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.
முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரஸ் ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன்
குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக
மதிப்பெண் எடுக்கும் டென்ஷன் மாணவர்களுக்கு இல்லை. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.
இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. மாணவர்களுக்கு எந்தப்
பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து
வரலாம்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின்
உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள்
வழங்குவார். ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள்
இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. முக்கியமாக
பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது.
அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீஸ்வரராக
இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக
இருந்தாலும்... அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க
வேண்டும். 'என் பொண்ணு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு
உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது.
அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம்
குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். 'டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை. தேர்வுகளை அடிப்படையாகக் கொள்ளாத இந்தக் கல்விமுறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான் உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி
என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்.
அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.
உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு
ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில்
பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர்எதுவும் இல்லை.
பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த
நாட்டை நோக்கிக் குவிகின்றனர்.
உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்.
நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே
வருகிறது.

No comments:

Post a Comment