அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !
தீமையென்னும் இருளகற்றி இன்ப ஒளியேற்றும் திருநாளாகக் கொண்டாடப்படுவது தீபாவளித் திருநாள்.
"தமஸோ மா ஜ்யோதிர்கமய' எனும் வேதவாக்கிற்கிணங்க, இருளிலிருந்து பேரின்பப் பேரொளிக்கு அழைத்துச் செல்லும் தீபாவளித் திருநாளுக்கு தத்துவங்கள், காரணங்கள், வழிபாட்டு நியதிகள், நீராடும் முறைகள் ஏராளம் உண்டு.
தீபாவளியின் முக்கியக் காரணகர்த்தாவாகத் திகழ்பவன் பௌமன்.
ஒருசமயம், இரண்யாட்சன் என்னும் அரக்கன் பூமியை கடத்திச் சென்று கடலுக்குள் ஒளித்துவைத்தான். இதனை அறிந்த மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, அந்த அரக்கனை அழித்து பூமியைக் கடலுக்குள்ளிருந்து மீட்டுவந்தார். அப்போது, பூமிதேவியின்மீது அவரது ஸ்பரிசம், அருள்பார்வை பட்டதால் உருவானவன்தான் பௌமன்.
அவன் வளர்ந்து பிராக்ஜோதிஷபுரம் எனும் நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்தான்.
தனக்கு மரணம் ஏற்படவேண்டுமென்றால் அது தன் தாயால் மட்டுமே ஏற்படவேண்டும் என்று வரம் பெற்றிருந்தான்.
அவன் பெற்ற வரத்தின் விளைவால், அவனுக்கு அசுரகுணம் தோன்றியது. அதனால் கொடுமைகள் பல புரிந்தான். தீய செயல்களில் ஈடுபட்டான். அவனது கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பகவானை பிரார்த்தித்தார்கள்.
அந்த காலகட்டத்தில் மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்திருந்தார்.
நரகாசுரன் என்று சிறப்புப்பட்டம் பெற்றிருந்த பௌமனின் கொடுமைகளை அழிக்க பகவான் உறுதிகொண்டார். தன் மனைவி சத்யபாமாவுடன் தேரில் ஏறி போருக்குப் புறப் பட்டார்.
கடும்போர் நடந்தது. சத்யபாமா, கிருஷ்ணனின் சாரதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள். அப்போது பௌமனின் ஆயுதத்தால் அடிபட்டதுபோல் பாவனை செய்து மயக்கமுற்று வீழ்ந்தார் கிருஷ்ணன். கோபம்கொண்ட சத்தியபாமா, பௌமன்மீது பாணத்தை எய்தாள். அடிபட்டு தரையில் வீழ்ந்த பௌமன், ""அம்மா அம்மா'' என்று குரல் கொடுத்தபடி சத்தியபாமாவைப் பார்த்தான். அவனது "அம்மா' என்ற குரல் சத்தியபாமாவுக்கு உண்மையை உணர்த்தியது. அடிபட்டு வீழ்ந்து கிடப்பவன் தன் மகன் என்பதை உணர்ந்தவள், தேரில் கிடந்த கிருஷ்ணனைப் பார்த்தாள். கிருஷ்ணன் சத்தியபாமாவைப் பார்த்தார். கிருஷ்ணரின் மாயா விளையாட்டினைப் புரிந்து கொண்டாள் சத்தியபாமா. தன் மகனை தானே கொன்ற துயரம் இருந்தாலும், தீயசக்தியாகத் திகழ்ந்த தன் மகன் இறந்த நாளை எல்லாரும் மகிழ்ச்சியோடு தீபங்கள் ஏற்றி கொண்டாட வேண்டுமென பகவானிடம் வரம் கேட்டாள். பகவானும் அப்படியே அருளினார். இது புராணச் செய்தி. இன்னொரு தகவலும் புராணத்தில் உண்டு.
தீர்க்கதமஸ் என்ற முனிவர், இயற்கை சூழ்ந்த இடத்தில் குடில் அமைத்து தன் மனைவி, மக்களுடன் வாழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் அரக்கர்களாலும், காட்டில் வாழும் மிருகங்களாலும் அவரது தவத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டன. இதற்கு வழிகாண இறைவனை வேண்டினார்.
அப்போது அங்கே தவத்தில் சிறந்த சனாதன முனிவர் வந்தார்.
அவரை வணங்கிய தீர்க்கதமஸ் தனக்கு ஏற்படும் இடையூறுகளைச் சொல்லி வருத்தப்பட்டார்.
""தீர்க்கதமஸ் முனிவரே, உமது துயரங்களும் இன்னல்களும் நீங்க ஓர் அருமையான விரதம் உண்டு. அதனைக் கடைப்பிடித்தால் நீங்கள் நலமுடன் வாழலாம்'' என்றார் சனாதன முனிவர்.
துலா மாதமான ஐப்பசி மாதத் தேய்பிறையில் திரயோதசி நாளில், மகாபிரதோஷ வேளையில் பூஜை செய்து, எமதீபம் ஏற்றி, எமதர்மராஜனை வழிபடவேண்டும். எமதர்மராஜனை மனதார பிரார்த்தனை செய்வதால் துன்பங்கள் நெருங்காது. அகால மரணம் ஏற்படாது. மேலும் தீவினைகளினால் நரகத்தில் துன்பப்படும் முன்னோர்கள் சுவர்க்கம் செல்லவும் இந்த எமதீபம் அருள்பாலிக்கும். மேலும் நம் வாழ்வு நலம்பெறும். எடுத்த காரியத்தில் தடைகள் ஏற்படாது'' என்றார். மேலும் சில தகவல்களையும் சொன்னார்.
நரகசதுர்த்தியான தீபாவளியன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடவேண்டும். அன்று எண்ணெயில் திருமகளும், எல்லா நீர் நிலைகளிலும் கங்கையும் உறைவதாக சாஸ்திரம் சொல்கிறது. எனவே, எண்ணெய் தேய்த்து புனித நீராடினால் கங்கையில் நீராடிய பலனும், திருமகள் கடாட்சமும் கிடைக்கும். கங்கா ஸ்நானம் முடிந்ததும் புத்தாடை உடுத்தி, இனிப்புப் பண்டங்கள் படைத்து இறைவனை வழிபட்டால் எல்லாம் நலமாகும்.
இந்தப் புனித நாளில் அரப்புப் பொடியில் கலைவாணியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கௌரியும், மலர்களில் மோகினி களும், புத்தாடைகளில் விஷ்ணுவும், பட்சணங் களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் உறைகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு தீபாவளி வழிபாடு குறித்த நியதிகளை சனாதனர் கூறியதைக் கேட்ட தீர்க்கதமஸ் முனிவரும் அவ்வாறே வழிபட்டு இறையருள் பெற்றார்.
மேலும் சில நிகழ்வுகள் தீபாவளித் திருநாளில் நடந்ததாக புராணம் கூறுகிறது. இறைவனைப் பிரிந்து வருந்திய உமாதேவி, கேதாரகௌரி விரதம் கடைப்பிடித்து அவருடன் இணைந்ததும் தீபாவளி நாளில்தான்.
கோகுலத்தில் தொடர் மழை பெய்வித்த இந்திரனால் கோகுலவாசிகள் துயரமடைந்தபோது, கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி, அதனடியில் கோகுலவாசிகளைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அடக்கினார். கோகுலவாசிகள் கோவர்த் தனகிரியை வழிபட்ட நாள் தீபாவளி.
சாவித்திரி, எமனோடு வாதிட்டு சத்தியவானை உயிருடன் மீட்ட நாளும் இதுவே.நசிகேதன், எமலோகம் சென்று வரம்பெற்று திரும்பிய நாளும் இதுதான்.
வாமனரால் பாதாள உலகத்திற்கு அழுத்தப்பெற்ற மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டு மக்களைக் காண பூமிக்கு வரும் நன்னாளே தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
சமணர்கள் மகாவீரர் மகா நிர்வாணம் அடைந்த நாளாக தீபாவளியைக் கொண்டாடு கின்றனர்.
தீபாவளி குறித்து இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.
"தீபாவளியார்' என்றொரு துறவி கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். அப் போது, அவர் வாழ்ந்த பகுதியை சந்திரகுப்தன் ஆட்சி புரிந்துவந்தான்.
ஒருநாள் அந்தத்துறவி மன்னனைச் சந்தித்து, "ராமபிரான் இராவணனை வென்று சீதையை மீட்டுவந்த நாளை திருநாளாகக் கொண்டாடவேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். ஆனால், மன்னன் ஏற்கவில்லை. உடனே அந்தத் துறவி, மன்னனுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார்.
இதனால் கோபமடைந்த மன்னன் அந்தத் துறவியை கழுவேற்றிக் கொன்றுவிட்டான்.
அந்தத் துறவி மரணமடைந்ததிலிருந்து நாட்டில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. அரண்மனை ஜோதிடர்கள் துறவியின் வேண்டுகோளை நிறைவேற்றினால் நாட்டில் சுபிட்சம் ஏற்படும் என்றனர். எனவே சந்திரகுப்தன் ராமபிரான், இராவணனை வென்ற நாளை திருநாளாகக் கொண்டாட ஆணையிட்டான். அதற்குப்பின் நாட்டில் மழை பெய்தது; நாடு சுபிட்சம் அடைந்தது. அந்தத் துறவியான "தீபாவளியார்' பெயரிலேயே, ராமரின் வெற்றித்திருநாளாக அனைவரும் கொண்டாடினார்கள். அதுதான் தீபாவளித் திருநாள் என்று ஒரு கதை உள்ளது.
தேவர்களும் அசுரர் களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து முதலில் விஷம் தோன்றியது. அதை உலகம் உய்யும்
பொருட்டு சிவபெருமான் உண்டார். அடுத்து பல பொருட்கள் தோன்றின. அதில் பாற்கடலிலிருந்து மகாலட்சுமியும் தோன்றினாள். ஸ்ரீமகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தாள். பிறகு, தன்வந்திரியானவர், கீழ் வலது கையில் அட்டைப்பூச்சி, இடது கையில் அமிர்த (மூலிகை) கலசத்துடனும், மேலிருகைகளில் சங்குசக்கரத்துடன் தோன்றினார். இவரே ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்தவர். இந்நிகழ்ச்சி கள் எல்லாம் தீபாவளித் திருநாளில் நடந்ததாகப் புராணம் கூறுகிறது.
பகீரதன், தன் முன்னோர்கள் புனிதமடையவேண்டி தேவலோக கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்த நாளும் தீபாவளித் திருநாள்தான்.
புனிதமான தீபாவளித் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடி மனிதநேயம் வளர்ப்போம்.