Tuesday, 24 November 2015

இனிய கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்..!

இனிய கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்..!
கார்த்திகை தீபம் ஏற்றி!… வாழ்வின் இருளுக்கு ஒளியேற்றுவோம்!..
எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம். எப்படி, தீபத்தின் ஒளி, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ.. அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.
சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி .. வாழ்வில் வளம் பெறுவோமாக!

கார்த்திகை தீபம் ஏற்றி!… வாழ்வின் இருளுக்கு ஒளியேற்றுவோம்!.. கார்த்திகை விளக்கின் தத்துவம்

இனிய கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்..!
கார்த்திகை தீபம் ஏற்றி!… வாழ்வின் இருளுக்கு ஒளியேற்றுவோம்!..
கார்த்திகை விளக்கின் தத்துவம்
எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம். எப்படி, தீபத்தின் ஒளி, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ.. அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.
சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்ட போது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின, ஆறு தீபப் பொறிகளும் சரவணப் பொய்கையில் மூழ்கி சிறு குழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல, பெருஞ் சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறு அகல்களில் சின்ன சின்ன குழந்தைகளாக, முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும் போது குறைந்த பட்சம் ஆறு தீபங்களை வாசலில் வைக்க வேண்டும். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல் தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே.
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி, தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. தீபத்தின் ஆடி பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு,நெய், எண்ணெய் நிறையும் இடத்தில சிவபெருமான் வாசம் செய்கிறார்.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி .. வாழ்வில் வளம் பெறுவோமாக!

Sunday, 22 November 2015

தவுன். அட ! இது நம்ம சீப்பைங்க!!

தவுன்.
அட ! இது நம்ம சீப்பைங்க!!
பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருள் தவுன். ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே உண்ணக் கிடைக்கும் தவுண், மிகுந்த மருத்துவ குணமிக்கது.
கர்ப்பகதருகு
மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரம், தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனை மரத்தின் வேர் முதல் மரத்தின் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் தரும். வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின் ஆயுள் 100 ஆண்டுகள். 90 அடி உயரம் வளரக்கூடியது.
பனங்காய்களில் இருந்து குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும், முற்றிய பனங்காயிலிருந்து சதைப் பகுதியை வேகவைத்து உண்ணலாம்.
பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும். கொட்டைக்குள் உருவாகும் சீப்பை (தவுன்) குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். கொஞ்சநாள் விட்டால், பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
60 நாள் மட்டும்
பனங்கொட்டையிலிருந்து கிடைக்கும் தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. குறிப்பிட்ட பருவத்துக்கு (60 நாள்கள்) கொட்டைகளை மண்ணில் புதைத்து, பின்னர் அவற்றை வெட்டி எடுத்து பெறப்படும் தவுணை, 25 ஆண்டுகளுக்குமுன்புவரை பலரும் ருசித்து சாப்பிட்டிருப்பார்கள்.
பனம்பழங்களிலிருந்து எடுக்கப்படும் கொட்டை என்று அழைக்கப்படும் பனம்விதைகளை சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக கொட்டைக்குழி என்றழைக்கப்படும் மண் குவியலில் இட்டு வைப்பார்கள் இது பொங்கல் நேரங்களில் பனங்கிழங்குக்காக வெட்டி எடுக்கப்படும் அந்த நேரங்களில் அரிவாள் வைத்து பனங்கொட்டைகளை பிளந்து அதன் உள்ளிருக்கும் தவுனைப் பெறலாம் இதை வெட்டுவது சற்று கடினம்தான் வெட்டினால் கிடைப்பது தின்ன தின்ன திகட்டாத சுவையுடய தவுன் எங்கள் ஊர் பனை மரங்கள் அதிகம் கானப்படுவதால் எங்களுக்கு இதை சாப்பிட அதிகம் வாய்ப்பு கிடைக்கும்.
இப்போதைய தலைமுறையினருக்கு தவுனை குறித்து பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மருத்துவ குணமிக்க இந்த தவுன் திருநெல்வேலி- தென்காசி பிரதான சாலையில் ராமச்சந்திரப்பட்டினம் பகுதியில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. பனைஓலையால் உருவாக்கப்பட்ட பட்டையில், 20 துண்டுகள் வரையிலான தவுண் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்தளம்பாறை கிராமத்தில் பெரும்பாலானவர்கள் பனைத் தொழிலாளிகள். ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்பகுதியில் தவுண் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், ஜூன், ஜூலை மாதங்களில் குற்றால சீசன் நேரங்களிலும் பழைய குற்றாலம் பகுதியில் ஒரு பட்டை தவுனை ரூ.60-க்கு விற்க்பப்படுகிறது.
டாக்டர்கள் பலரும் இதை விரும்பி வாங்கி உண்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்னைக்கு இது அருமருந்தாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உடல் சூட்டை தணிக்கவும், வயிற்று கோளாறுகளுக்கும் தீர்வாக இது இருக்கிறது. நுங்கு விற்பனை செய்யும்போது தவுனையும் கூடவே விற்பனை செய்கிறார்கள்.

Monday, 9 November 2015

தீமையென்னும் இருளகற்றி இன்ப ஒளியேற்றும் திருநாளாகக் கொண்டாடப்படுவது தீபாவளித் திருநாள்.

அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !
தீமையென்னும் இருளகற்றி இன்ப ஒளியேற்றும் திருநாளாகக் கொண்டாடப்படுவது தீபாவளித் திருநாள்.
"தமஸோ மா ஜ்யோதிர்கமய' எனும் வேதவாக்கிற்கிணங்க, இருளிலிருந்து பேரின்பப் பேரொளிக்கு அழைத்துச் செல்லும் தீபாவளித் திருநாளுக்கு தத்துவங்கள், காரணங்கள், வழிபாட்டு நியதிகள், நீராடும் முறைகள் ஏராளம் உண்டு.
தீபாவளியின் முக்கியக் காரணகர்த்தாவாகத் திகழ்பவன் பௌமன்.
ஒருசமயம், இரண்யாட்சன் என்னும் அரக்கன் பூமியை கடத்திச் சென்று கடலுக்குள் ஒளித்துவைத்தான். இதனை அறிந்த மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, அந்த அரக்கனை அழித்து பூமியைக் கடலுக்குள்ளிருந்து மீட்டுவந்தார். அப்போது, பூமிதேவியின்மீது அவரது ஸ்பரிசம், அருள்பார்வை பட்டதால் உருவானவன்தான் பௌமன்.
அவன் வளர்ந்து பிராக்ஜோதிஷபுரம் எனும் நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்தான்.
தனக்கு மரணம் ஏற்படவேண்டுமென்றால் அது தன் தாயால் மட்டுமே ஏற்படவேண்டும் என்று வரம் பெற்றிருந்தான்.
அவன் பெற்ற வரத்தின் விளைவால், அவனுக்கு அசுரகுணம் தோன்றியது. அதனால் கொடுமைகள் பல புரிந்தான். தீய செயல்களில் ஈடுபட்டான். அவனது கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பகவானை பிரார்த்தித்தார்கள்.
அந்த காலகட்டத்தில் மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்திருந்தார்.
நரகாசுரன் என்று சிறப்புப்பட்டம் பெற்றிருந்த பௌமனின் கொடுமைகளை அழிக்க பகவான் உறுதிகொண்டார். தன் மனைவி சத்யபாமாவுடன் தேரில் ஏறி போருக்குப் புறப் பட்டார்.
கடும்போர் நடந்தது. சத்யபாமா, கிருஷ்ணனின் சாரதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள். அப்போது பௌமனின் ஆயுதத்தால் அடிபட்டதுபோல் பாவனை செய்து மயக்கமுற்று வீழ்ந்தார் கிருஷ்ணன். கோபம்கொண்ட சத்தியபாமா, பௌமன்மீது பாணத்தை எய்தாள். அடிபட்டு தரையில் வீழ்ந்த பௌமன், ""அம்மா அம்மா'' என்று குரல் கொடுத்தபடி சத்தியபாமாவைப் பார்த்தான். அவனது "அம்மா' என்ற குரல் சத்தியபாமாவுக்கு உண்மையை உணர்த்தியது. அடிபட்டு வீழ்ந்து கிடப்பவன் தன் மகன் என்பதை உணர்ந்தவள், தேரில் கிடந்த கிருஷ்ணனைப் பார்த்தாள். கிருஷ்ணன் சத்தியபாமாவைப் பார்த்தார். கிருஷ்ணரின் மாயா விளையாட்டினைப் புரிந்து கொண்டாள் சத்தியபாமா. தன் மகனை தானே கொன்ற துயரம் இருந்தாலும், தீயசக்தியாகத் திகழ்ந்த தன் மகன் இறந்த நாளை எல்லாரும் மகிழ்ச்சியோடு தீபங்கள் ஏற்றி கொண்டாட வேண்டுமென பகவானிடம் வரம் கேட்டாள். பகவானும் அப்படியே அருளினார். இது புராணச் செய்தி. இன்னொரு தகவலும் புராணத்தில் உண்டு.
தீர்க்கதமஸ் என்ற முனிவர், இயற்கை சூழ்ந்த இடத்தில் குடில் அமைத்து தன் மனைவி, மக்களுடன் வாழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் அரக்கர்களாலும், காட்டில் வாழும் மிருகங்களாலும் அவரது தவத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டன. இதற்கு வழிகாண இறைவனை வேண்டினார்.
அப்போது அங்கே தவத்தில் சிறந்த சனாதன முனிவர் வந்தார்.
அவரை வணங்கிய தீர்க்கதமஸ் தனக்கு ஏற்படும் இடையூறுகளைச் சொல்லி வருத்தப்பட்டார்.
""தீர்க்கதமஸ் முனிவரே, உமது துயரங்களும் இன்னல்களும் நீங்க ஓர் அருமையான விரதம் உண்டு. அதனைக் கடைப்பிடித்தால் நீங்கள் நலமுடன் வாழலாம்'' என்றார் சனாதன முனிவர்.
துலா மாதமான ஐப்பசி மாதத் தேய்பிறையில் திரயோதசி நாளில், மகாபிரதோஷ வேளையில் பூஜை செய்து, எமதீபம் ஏற்றி, எமதர்மராஜனை வழிபடவேண்டும். எமதர்மராஜனை மனதார பிரார்த்தனை செய்வதால் துன்பங்கள் நெருங்காது. அகால மரணம் ஏற்படாது. மேலும் தீவினைகளினால் நரகத்தில் துன்பப்படும் முன்னோர்கள் சுவர்க்கம் செல்லவும் இந்த எமதீபம் அருள்பாலிக்கும். மேலும் நம் வாழ்வு நலம்பெறும். எடுத்த காரியத்தில் தடைகள் ஏற்படாது'' என்றார். மேலும் சில தகவல்களையும் சொன்னார்.
நரகசதுர்த்தியான தீபாவளியன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடவேண்டும். அன்று எண்ணெயில் திருமகளும், எல்லா நீர் நிலைகளிலும் கங்கையும் உறைவதாக சாஸ்திரம் சொல்கிறது. எனவே, எண்ணெய் தேய்த்து புனித நீராடினால் கங்கையில் நீராடிய பலனும், திருமகள் கடாட்சமும் கிடைக்கும். கங்கா ஸ்நானம் முடிந்ததும் புத்தாடை உடுத்தி, இனிப்புப் பண்டங்கள் படைத்து இறைவனை வழிபட்டால் எல்லாம் நலமாகும்.
இந்தப் புனித நாளில் அரப்புப் பொடியில் கலைவாணியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கௌரியும், மலர்களில் மோகினி களும், புத்தாடைகளில் விஷ்ணுவும், பட்சணங் களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் உறைகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு தீபாவளி வழிபாடு குறித்த நியதிகளை சனாதனர் கூறியதைக் கேட்ட தீர்க்கதமஸ் முனிவரும் அவ்வாறே வழிபட்டு இறையருள் பெற்றார்.
மேலும் சில நிகழ்வுகள் தீபாவளித் திருநாளில் நடந்ததாக புராணம் கூறுகிறது. இறைவனைப் பிரிந்து வருந்திய உமாதேவி, கேதாரகௌரி விரதம் கடைப்பிடித்து அவருடன் இணைந்ததும் தீபாவளி நாளில்தான்.
கோகுலத்தில் தொடர் மழை பெய்வித்த இந்திரனால் கோகுலவாசிகள் துயரமடைந்தபோது, கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி, அதனடியில் கோகுலவாசிகளைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அடக்கினார். கோகுலவாசிகள் கோவர்த் தனகிரியை வழிபட்ட நாள் தீபாவளி.
சாவித்திரி, எமனோடு வாதிட்டு சத்தியவானை உயிருடன் மீட்ட நாளும் இதுவே.நசிகேதன், எமலோகம் சென்று வரம்பெற்று திரும்பிய நாளும் இதுதான்.
வாமனரால் பாதாள உலகத்திற்கு அழுத்தப்பெற்ற மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டு மக்களைக் காண பூமிக்கு வரும் நன்னாளே தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
சமணர்கள் மகாவீரர் மகா நிர்வாணம் அடைந்த நாளாக தீபாவளியைக் கொண்டாடு கின்றனர்.
தீபாவளி குறித்து இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.
"தீபாவளியார்' என்றொரு துறவி கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். அப் போது, அவர் வாழ்ந்த பகுதியை சந்திரகுப்தன் ஆட்சி புரிந்துவந்தான்.
ஒருநாள் அந்தத்துறவி மன்னனைச் சந்தித்து, "ராமபிரான் இராவணனை வென்று சீதையை மீட்டுவந்த நாளை திருநாளாகக் கொண்டாடவேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். ஆனால், மன்னன் ஏற்கவில்லை. உடனே அந்தத் துறவி, மன்னனுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார்.
இதனால் கோபமடைந்த மன்னன் அந்தத் துறவியை கழுவேற்றிக் கொன்றுவிட்டான்.
அந்தத் துறவி மரணமடைந்ததிலிருந்து நாட்டில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. அரண்மனை ஜோதிடர்கள் துறவியின் வேண்டுகோளை நிறைவேற்றினால் நாட்டில் சுபிட்சம் ஏற்படும் என்றனர். எனவே சந்திரகுப்தன் ராமபிரான், இராவணனை வென்ற நாளை திருநாளாகக் கொண்டாட ஆணையிட்டான். அதற்குப்பின் நாட்டில் மழை பெய்தது; நாடு சுபிட்சம் அடைந்தது. அந்தத் துறவியான "தீபாவளியார்' பெயரிலேயே, ராமரின் வெற்றித்திருநாளாக அனைவரும் கொண்டாடினார்கள். அதுதான் தீபாவளித் திருநாள் என்று ஒரு கதை உள்ளது.
தேவர்களும் அசுரர் களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து முதலில் விஷம் தோன்றியது. அதை உலகம் உய்யும்
பொருட்டு சிவபெருமான் உண்டார். அடுத்து பல பொருட்கள் தோன்றின. அதில் பாற்கடலிலிருந்து மகாலட்சுமியும் தோன்றினாள். ஸ்ரீமகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தாள். பிறகு, தன்வந்திரியானவர், கீழ் வலது கையில் அட்டைப்பூச்சி, இடது கையில் அமிர்த (மூலிகை) கலசத்துடனும், மேலிருகைகளில் சங்குசக்கரத்துடன் தோன்றினார். இவரே ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்தவர். இந்நிகழ்ச்சி கள் எல்லாம் தீபாவளித் திருநாளில் நடந்ததாகப் புராணம் கூறுகிறது.
பகீரதன், தன் முன்னோர்கள் புனிதமடையவேண்டி தேவலோக கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்த நாளும் தீபாவளித் திருநாள்தான்.
புனிதமான தீபாவளித் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடி மனிதநேயம் வளர்ப்போம்.

தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள்.

அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !
தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள்.
அன்று நாம் எங்கிருந்து குளித்தாலும் அது கங்கா ஸ்நானம்தான். அன்று எல்லா தேவதைகளும் பண்டிகைப் பொருட்களில் வாசம் செய்வர்.
எண்ணெயில் லட்சுமி, அரப்புத் தூளில் கலைவாணி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கௌரி, மலரில் மோகினி, தண்ணீரில் கங்கை, புத்தாடையில் விஷ்ணு, பட்சணத்தில்அமிர்தம், தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.
தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டம்….உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம். மகா லக்ஷ்மியும் பாற்கடலில் தானே அவதரித்தாள் !
கங்கா ஸ்நானம் செய்தபின் மகாலக்ஷ்மி பூஜையில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்க வீட்டில் செல்வம் பெருகும்;

தீபாவளித் திருநாளில் யமனுக்கும் சனிக்கும் மகிழ்ச்சி! யமனுக்கு மகிழ்ச்சி...!

தீபாவளித் திருநாளில் யமனுக்கும் சனிக்கும் மகிழ்ச்சி!
யமனுக்கு மகிழ்ச்சி...!
தீபாவளித் திருநாளில் யார் ஒருவர் தன் சகோதரியிடம் திலகமிட்டுக் கொள்கிறார் களோ, அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன்.-யமன்
ஐப்பசி மாத துவிதியை அன்று தன் சகோதரியின் வீட்டிற்கு யமன், சென்றார். யமனின் சகோதரியான எமி, தன் சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து மலர்மாலை சூட்டி, நெற்றியில் திலகம் இட்டு அன்புடன் வரவேற்று உபசரித்தாள்.
இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து இனிப்பு உண்டு, தங்கள் சகோதரப் பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள். தன் சகோதரியிடம் நெற்றியில் திகலமிட்டுக் கொண்ட நாள் யமனுக்குப் பிடித்தமான நாளானது.
அப்போது, யமன், "இந்த நாளில் யார் ஒருவர் தன் சகோதரியிடம் திலகமிட்டுக் கொள்கிறார் களோ, அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு யமவாதனை கிடையாது' என்று வரம் கொடுத்தாராம்.
இந்தப் புராணக்கதையின் அடிப்படையில் தான் வடநாட்டில் பெண்கள் தங்கள் சகோதரர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். அண்ணன்- தம்பி ஆகியோருக்கு நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துவார்கள். சகோதரப் பாசத்தை வளர்க்கும் விழாவாக இது திகழ்கிறது.
மேலும் மகாளய பட்ச நாட்களில் மறைந்த முன்னோர்கள், தாங்கள் வசித்த ஊருக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால், அவர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது.
பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் உடனே திரும்பிச் செல்வதில்லை. தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற் குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அதனால் வடநாட்டில் வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம்.
இந்த நாள் திரயோதசி. இதனை தன திரயோதசி என்றும் சொல்வர். இந்நாளில் யம தீபம் என்ற விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றுவது வழக்கம்.
இந்த தீபத்தினை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவார்கள். இதனால் முன்னோர் கள் மட்டுமல்ல; யமனும் மகிழ்வானாம்.
யமதீபம் ஏற்றினால் விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமலும்; ஆரோக்கியமாக வாழவும் யமன் அருள் புரிவார் என்பது நம்பிக்கை.
சனி பகவானும் யமனும் சகோதரர்கள். எனினும் கருத்து வேறுபாடு உள்ளவர்கள். இருவரும் இறைவனை வழிபட்டுத் தகுந்த பதவியினைப் பெற்று பூலோகவாசிகளுக்கு அவரவர் செய்யும் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார்கள்.
தீபாவளித் திருநாளில் சனிக்கும் மகிழ்ச்சி...!
மனதளவில் யமனுக்கும் சனிக்கும் ஒத்துப் போகாவிட்டாலும், தீபாவளி அன்று மட்டும் அவர்கள் தங்களை மகிழ்விக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்வது வழக்கம்.
சனி பகவானுக்குப் பிடித்தமானது கருப்பு எள். தீபாவளிப் பண்டிகை தினத்தில் காலையில் கோள்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும்போது, சனிக்கோள் தனக்குப் பிடித்தமான எள்ளுக்குப் புத்துயிர் ஊட்டுவதாகச் சொல்லப்படுகிறது.
அதனால், அன்று அதிகாலையில் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயைப் பூஜித்து மக்கள் தலையிலும் உடலிலும் தேய்த்துக் குளிப்பதால், சனி பகவான் அவர்களை வாழ்த்துவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. மேலும், அன்று நல்லெண்ணெயில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் நம்பிக்கை.
எனவே, தீபாவளித் திருநாள் சனி பகவானுக்கு மகிழ்ச்சியூட்டும் நாள் என்பர். மேலும், தீபாவளிக்குப் பலகாரங்கள் செய்யும்போது, முறுக்கு தயாரிக்க மாவு பிசையும்போது அதில் கருப்பு எள் சேர்ப்பார்கள்.
அதேபோல எள் தட்டை என்னும் பலகாரத்திலும் எள் சேர்க்கப்படுவதால் சனி பகவான் மகிழ்ச்சி அடைகிறார்.
இதுபோல
கங்கா ஸ்நானம் செய்வதற்காக உகந்த நேரம்:
* காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை.
* காலை 4.30 மணிக்கு முன்னதாக குளிக்க கூடாது.
* சூரிய உதயத்துக்கு பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும் நியதி. நீங்கள் பட்டாசு வெடித்த பின் குளிக்கலாமே.
குளிப்பது எப்படி?: நல்லெண்ணெயில் இஞ்சி துண்டு, பூண்டு சில பற்கள், மிளகு இரண்டு, சிறிய வெங்காயம், விரலி மஞ்சள் துண்டு, சீரகம் சேர்த்து
நன்றாக காய்ச்ச வேண்டும். எண்ணெய் ஆறியதும் வீட்டில் பெரியவர், சிறியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட வேண்டும். குளியலுக்கு பின் தீபாவளி பூஜையை முடித்து சாப்பிட வேண்டும். சாப்பிட பிறகே புத்தாடை அணிய வேண்டும். வெறும் வயிற்றில் புத்தாடை அணிவது சாஸ்திரப்படி உகந்ததல்ல.
அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !

கிருஷ்ணர் வாழ்க்கை சொல்லும் பாடம்.... பிரச்சனை என்றவுடன் அதையே நினைத்து பூதாகரமாக வளர்த்து விடுகிறோம், என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.

கிருஷ்ணர் வாழ்க்கை சொல்லும் பாடம்....
பிரச்சனை என்றவுடன் அதையே நினைத்து பூதாகரமாக வளர்த்து விடுகிறோம், என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.
பிரச்சனையும் பூதாகரமும் -
பால கிருஷ்ணரும், அவரது அண்ணன் பலராமரும், நண்பர் சுதாமரும் காட்டு வழியில் நடந்து வந்தார்கள். இருட்டுவதற்குள் ஊர் திரும்பி விடலாம் என்று அவர்கள் வேகமாக நடந்தாலும் இரவைத் தடுக்க முடியவில்லை. இரவு நேரத்தில் காட்டுக்குள் தங்கியாக வேண்டிய நிலைமை.
காட்டுக்குள் பூதம் ஒன்று இருந்தது. அது அங்கு இரவு நேரங்களில் வரும் மக்களுடன் சண்டையிட்டு அவர்களை அடித்து சாப்பிட்டுவிடும். சண்டையிடும் போது எதிராளியின் வலிமையும் பூதத்திற்குச் சேர்ந்து விடும். இந்த மூவரும் திடகாரமானவர்கள். பார்த்ததும் பூதத்திற்கு ‘இன்று நல்ல வேட்டை தான்’ என்று தோன்றியது.
மூவர் முன்பும் வந்து நின்றது. நான்கு பேரும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மூன்று ‘ஷிப்ட்’ போட்டு பூதத்துடன் சிறுவர்கள் சண்டையிட வேண்டும். யாரையாவது ஒருவரை பூதம் அடித்து வீழ்த்திவிட்டால், மூவரையும் சாப்பிட்டு விடும். ஒப்பந்தத்திற்கு மூவரும் ஒப்புக்கொண்டதும் முதலில் பலராமர் சண்டையிட்டார்.
பலராமர் வீரர் தான். ஆனால் பெரிதாக பூதம் வளரத் தொடங்கியதால், பலந்த காயத்தோடு சுதாமரை எழுப்பினார். அடுத்து சுதாமரும் ஆக்ரோஷத்துடன் போரிட்டார். இன்னும் நான்கு மணி நேரம் கழிந்தது. அவராலும் பூதத்தை வீழ்த்த முடியவில்லை. கடைசியாக கிருஷ்ணரை எழுப்பிவிட்டு சுதாமர் தூங்கிவிட்டார்.
சண்டையிட்டதால் பலராமர், சுதாமர் இருவருக்கும் நல்ல தூக்கம். மறுநாள், சூரிய ஒளி நன்றாகத் தெரிந்த பிறகு தான், இருவரும் எழுந்தனர். கிருஷ்ணர் உடலில் சிறு காயம் கூட இல்லாமல் தூங்கி கொண்டிருந்தார். இருவருக்கும் ஆச்சரியம். பூதம் என்னவானது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இருவரும் கிருஷ்ணரை எழுப்பினார்கள். கிருஷ்ணர் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்தார்.
“பூதம் எங்கே?” என்று இருவரும் கேட்டார்கள். “பூதமா... அப்படின்னா” என்று பதில் கேள்வி வந்தது. இருவரும் வற்புறுத்தவே, கிருஷ்ணர் தனது அங்கியில் இருந்த முடிச்சை அவிழ்த்து, “இதுவா...” என்று கேட்டார். ஆம், அது பூதம் தான். கட்டை விரல் வடிவத்தில் இருந்த அந்த பூதம், விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடிவிட்டது.
உண்மையில் நடந்தது இதுதான். சண்டையிடும் போது பெரியதாகும் பூதம், எப்போது சிறியதாகும் என்று யாரும் யோசிக்கவே இல்லை. பூதம் சண்டையிட கிருஷ்ணரைப் பார்த்தப் போது அவர் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது போல இருந்தார். பூதம் உற்சாகம் குறையத் தொடங்கியதும் வடிவமும் சிறியதாகத் தொடங்கியது. கிருஷ்ணர் அப்போதும் அதைக் கண்டுகொள்ளாமல் போகவே கட்டை விரல் வடிவத்தில் சுருங்கிவிட்டது.
பெரிய தத்துவத்தை உணர்ந்து கொண்டது போல பலராமரும், சுதாமரும் கிருஷ்ணரைப் பார்த்தார்கள். எதுவும் நடக்காதது போல, புன்னகைத்துக் கொண்டிருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

உன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை விட அதிகமாய்க் கொடுப்பது தான் பெருந்தன்மை. உன்னை விட எனக்கே அதிகம் தேவையாய் இருக்கும் ஒரு பொருளைத் தருவதில் இருக்கிறது பெருந்தன்மை –

பெருந்தன்மை....
உன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை விட அதிகமாய்க் கொடுப்பது தான் பெருந்தன்மை.
உன்னை விட எனக்கே அதிகம் தேவையாய் இருக்கும் ஒரு பொருளைத் தருவதில் இருக்கிறது பெருந்தன்மை –
ஆலயத்தின் முன்னால் இருந்தது அந்தஉண்டியல்.. செல்வந்தர்கள் வந்தார்கள் தங்கள் கைகளில் அள்ளி வந்திருந்த பணத்தை அதில் கொட்டினார்கள்.
தங்கள் பெருந்தன்மையை அடுத்தவர்கள் பார்க்கவேண்டும் எனும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது.
அப்போது ஒரு ஏழை விதவையும் வந்தாள். அவளுடைய சுருக்குப் பையில் இரண்டே இரண்டு காசுகள் இருந்தன. அதைப் போட்டாள். அமைதியாய்க் கடந்து போனாள்.
அள்ளிக் கொட்டியவர்கள் இந்தப் பெண் கிள்ளிப் போட்டதை ஏளனமாய்ப் பார்த்திருக்கக் கூடும்.
ஓரமாய் அமர்ந்திருந்த கடவுள் சொன்னார். “இந்த உண்டியலில் அதிகமாய்க் காணிக்கை போட்டது அந்த ஏழை விதவை தான்.
எல்லோரும் தன்னிடமிருந்ததில் மிகுதியானதைப் போட்டார்கள். இவளோ தன்னிடம் இருக்கும் முழுவதையும் போட்டுவிட்டாள்” என்றார்.
பெருந்தன்மை என்பது பிச்சையிடுதல் அல்ல. பெருந்தன்மை என்பது தேவையில் இருக்கும் இன்னொருவரின் தேவையை நிறைவேற்றும் மனநிலையும், செயல்பாடும்.
ஒரு மனிதன் தேவையில் இருக்கும்போது, ஒரு அன்பின் செயலுக்கான கதவு நம் முன்னால் திறக்கிறது என்பார்கள். அந்தக் கதவைக் கண்டும் காணாததும் போல் நாம் சென்று விடும்போது மனித நேயத்தை மறுதலித்தவர்களாய் மாறிவிடுகிறோம்.
தன்னலம் தாண்டிய இடங்களில் மட்டுமே பெருந்தன்மை கிளை விட்டுச் செழிக்க முடியும்.
எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறுவயதுத் தங்கைக்கு லூகேமியா நோய். இரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்பிழைப்பாள் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிறுவனுடைய இரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது. “தங்கைக்கு இரத்தம் கொடுக்க சம்மதமா?” மருத்துவர்கள் கேட்டார்கள். கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன் “சரி” என்றான்.
அவனிடமிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்குப் பின், அருகில் இருந்த நர்சை அழைத்த சிறுவன் கேட்டான், ”நான் எப்போது சாகத் துவங்குவேன் ?”.
நர்ஸ் அதிர்ச்சியடைந்தாள். தனது இரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள் ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான்.
தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இது தான் தன்னலமற்ற அன்பின் வடிவம் !
“நான்” என்பதை பின்னால் நிறுத்தி “நீ, உனது விருப்பம்” என்பதை முன்னில் நிறுத்துகையில் உறவுகள் செழிக்கத் துவங்குகின்றன.
ஒரு குடும்பத்தில் அனைவரும் அத்தகைய சிந்தனை கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் ஆனந்தத்தின் சோலையாகவே பூத்துச் சிரிக்கும்.
நமக்கு என்ன கிடைக்கிறது என்பது நமது வாழ்தலின் அடிப்படையாகிறது. நாம் என்ன கொடுக்கிறோம் என்பதே நமது வாழ்வின் அடிப்படையாகிறது – என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.
கொடுத்தல் என்பது வெறும் பணம் சார்ந்ததல்ல ! அது உங்கள் திறமை, நேரம், அருகாமை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் மன்னிப்பு, ஆறுதல் என அதன் முகம் வேறு படலாம். வகைகள் எதுவானாலும் வேர் என்பது பெருந்தன்மை என்பதைப் புரிந்து கொள்வோம்.
பெருந்தன்மை என்பது வெறுமனே மனதுக்குள் சொல்லிப் பார்க்க வேண்டிய கவிதையோ, பாடலோ அல்ல. அது ஒரு செயலாக வெளிப்பட வேண்டிய உயரிய குணாதிசயம்.
ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும் போதும் பிறருக்கு உங்களால் என்ன செய்ய முடியும் எனும் சிந்தனை மனதின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கட்டும். பெருந்தன்மையைக் கவனமாகச் செயல்படுத்தத் துவங்கினாலே அது நமது வாழ்வின் பாகமாக மாறிவிடும்.
யாருக்கு உதவி செய்தால் அவர்களால் திருப்பி உங்களுக்குத் தர இயலாதோ அந்த அளவுக்கு ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவுவது உயரிய நிலை.
நமது வீட்டின் கதவுகள் ஏழைகளுக்காகவும் திறந்தே இருப்பது பெருந்தன்மையின் அழகிய நிலை. பெருந்தன்மை உடையவர்கள் தான் மனதளவில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்று.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கொடுப்பது என்பது இழப்பது அல்ல ! சேமிப்பது ! பிறருடைய அன்பையும், வாழ்வுக்கான அர்த்தத்தையும் !

தித்திக்கும் தீபாவளி திருநாளில்

தித்திக்கும் தீபாவளி திருநாளில் 
வண்ண மயமான ஆடைகள் உடுத்தி 
மகிழ்ச்சி பொங்க பட்டாசு வெடித்து 
பலகாரம் பகிர்ந்து உண்டு 
குடும்பத்தில் சந்தோசம் உண்டாக 
அனைவருக்கும்,என் மனமார்ந்த வாழ்த்துகள்...