Tamil and Vedas
A blog exploring themes in Tamil and vedic literature
மரணத்தை வெல்லும் மனித குலம்! – விஞ்ஞானியின் கணிப்பு!! (Post No.8175)

Post No. 8175
Date uploaded in London – – –15 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மே,2020 கோகுலம் கதிர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
மரணத்தை வெல்லும் மனித குலம்! – விஞ்ஞானியின் இன்ப அதிர்ச்சிக் கணிப்பு!!
ச. நாகராஜன்
அமெரிக்கரான ரேமாண்ட் கர்ஸ்வெய்ல் (Raymond Kurzweil – பிறப்பு : 12-2-1948, இப்போது வயது 72) ஒரு அதிசயமான விஞ்ஞானி. எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதைச் சொவதில் இவர் வல்லுநர். ஜோதிடம் அல்ல இவர் கூறுவது; அறிவியல் கணிப்பு இவருடையது. சோவியத் யூனியன் சிதறுண்டு போகும் என்று இவர் சொன்னபடி நடந்தது. இண்டர்நெட் பெரிதாக வளர்ந்து உலகில் தகவல் புரட்சியைச் செய்யும் இன்று இவர் கூறியபடியே இன்று நடக்கிறது. ரொபாட்டுகளும், செயற்கை நுண்ணறிவும் அடுத்த புரட்சியை ஆரம்பிக்கும் என்று இவர் சொல்வது நடக்க ஆரம்பித்து விட்டது.
ஏராளமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்திருப்பதால் அமெரிக்க காப்புரிமை அலுவலகம் இவரை கௌரவிக்கும் வண்ணம் கண்டுபிடிப்பாளர் ஹாலில் இவர் பெயரை 2002 ஆம் ஆண்டு சேர்த்தது. பெறுதற்கு அரிய பரிசான 5 லட்சம் டாலர் (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 76 ரூபாய்) பரிசுத் தொகையை லெமல்ஸன் – எம்.ஐ.டி.யிடமிருந்து 2001 இல் இவர் பெற்றார். இவரது ஏழு புத்தகங்களும் உலகில் பல லட்சக்கணக்கானோர் படித்து வியக்கும் புத்தகங்கள்.
இவர் உலகப் போக்கைக் கூர்ந்து கவனித்து தன் முடிவைக் கூறி இருக்கிறார். அவற்றில் தலையாய பத்து கணிப்புகளை, பத்திலிருந்து ஆரம்பித்து ஒன்று வரை செல்வோம் ;.

10. அயல்கிரகவாசிகளுடன் சந்திப்பு!
விண்வெளித் தொழில்நுட்பம் இன்னும் அதிக அளவில் வளர்ந்து தொலைதூர கிரகங்களுக்கு மனிதர்கள் சீக்கிரமாகச் செல்லும் காலம் வர இருக்கிறது. அயல்கிரகங்கள் பலவற்றில் உயிர் வாழும் இனங்களை நாம் சந்திக்கப் போகிறோம்.
9. பூமியின் எதிர்காலம்!
பூமி அழிந்து விடும், கடல் பொங்கும், காடுகள் அழியும், ஜனத்தொகை வீக்கத்தால் உலக மக்கள் பசியால் வாடுவார்கள் போன்ற பல அபாயங்கள் பல விஞ்ஞானிகளால் சொல்லப்பட்டு வருகிறது. இந்த சந்தேகப் பேர்வழிகள் சொல்வது போல எதுவும் நடக்காது. பூமி இன்னும் ஆயிரம் வருடம் கூட இருக்காது, எல்லா ஆதாரவளங்களும் குறைந்து மனித குலம் அழியும் என்ற இவர்களின் வாதத்தை ரே மறுக்கிறார். தொழில்நுட்பம் அபாரமாக வளர்ந்து நமக்குக் கை கொடுக்கும் என்பது அவர் கணிப்பு.
அது சரி, விண்வெளிக் கற்களும், எரி நட்சத்திரங்களும் வந்து மோதும் என்கிறார்களே அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று அவரைக் கேட்டால், “இன்னும் அதிசயிக்கத் தக்க கண்டுபிடிப்புகள் நிகழும், அவற்றால் அழிவு என்பது எந்த விதத்திலும் நடக்காது. அழிவு பற்றிய எச்சரிக்கைகளும் ஊகங்களும் பொய்யாகும் என்கிறார் அவர்.
8. ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசு
பூமி சுற்றுப்புறச்சூழல் மாசினால் மிகவும் கெட்டு விடும் என்ற விஞ்ஞானிகளின் கணிப்பை ரே மறுக்கிறார். “நேனோ டெக்னாலஜி எனப்படும் புது தொழில்நுட்பம் நமது ஆற்றல் தேவையை தேவைக்கு அதிகமாகவே தந்து விடும்; அது பூமியையும் வளி மண்டலத்தையும் சுத்தமாக்கும்; சுத்தமான காற்று, சுத்தமான பருகும் நீர் பூமி வாழ் மக்கள் அனைவருக்கும் நேனோ தொழில்நுட்பம் தந்து விடும்” என்கிறார் அவர்.
“இன்னொரு அதிசயம் நடக்கப் போகிறது! சூரிய ஒளியைப் ‘பிடித்து வைத்துக் கொள்ளப்’ போகிறோம். சோலார் பேனல்கள் ஏகப்பட்ட விந்தைகளை நிகழ்த்தும். 2030ஆம் ஆண்டிற்குள் இது நடந்து நமது ஆற்றல் தேவைகள் முற்றிலுமாக பூர்த்தி செய்யப்படும்” என்று அவர் கூறும் போது பிரமிக்க வேண்டியிருக்கிறது!
7. ஜனத்தொகை பெருக்கம் பற்றி கவலைப்பட வேண்டாம்!
இன்னும் ஆயிரம் வருடங்களில் நமது பூமியில் ஜனத்தொகை 1400 கோடியாக உயரப் போகிறது. (இப்போது 750 கோடி). இந்த ஜனத்தொகையிலிருந்து, ஏராளமான பேர்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தக்க தீர்வை வழங்குவர். அதிகரிக்கும் உணவுத் தேவைக்கும், மனிதர்களின் பூரண ஆரோக்கியத்திற்கும் வழி கண்டுபிடிக்கப்படும்.
எப்படி தாவர வகைகள் தமக்கான ஊட்டச் சத்தை சூரியனிடமிருந்து பெற்றுக் கொள்கிறதோ அதே போல மனிதர்களும் தங்களுக்கான ஊட்டச் சத்தை சூரியனிடமிருந்தே பெறுவர். இதற்கான தொழில்நுட்பம் கண்டு பிடிக்கப்படும். ஆகவே இன்று நாம் உப்யோகிக்கும் கறிகாய், விடமின்கள் போன்ற ஆதார வளங்களை விட முற்றிலும் வேறான சத்தை நாம் பெறுவோம்.
அறிவியல் புனைகதைகளில் சொல்லப்படும் கதை போல இது இருந்தாலும் இப்படி நடக்கப் போவது உறுதி என்கிறார் ரே.

6. எதிர்காலத் தொழில்நுட்பம்!
சிங்குலாரிடி (Singularity) என்னும் ஒரு புது வித சேர்க்கை சீக்கிரமே உருவாகி விடும். சிங்குலாரிடி என்றால் என்ன? இப்போது புதுக் கண்டுபிடிப்புகளும் அதை உருவாக்குபவையும் ஒன்றாகி விடுவது தான் சிங்குலாரிடி. இதை சுலபமாக விளங்கிக் கொள்ள முடியும். கண்ணுக்குப் போடும் கண்ணாடியும் காண்டாக்ட் லென்ஸும் பார்வைக் கோளாறைப் போக்கி நமது பார்க்கும் சக்தியை இப்போது தருகிறது. இது மாறி பார்க்கப்படும் காட்சிகள் நேரடியாக நமது கண்களில் ரெடினாக்களில் எழுதப்பட்டு விடும்! இது நமது வாழ்க்கையையே முற்றிலுமாக மாற்றி விடும். அத்துடன் விண்வெளியிலிருந்தே நமக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் நாம் பெறப் போகிறோம்!
நமது டி என் ஏ. எனப்படும் மரபணு ஆராய்ச்சி வெகுவாக முன்னேற்றம் அடைந்து விண்வெளியில் தொலை தூரங்களுக்கு நாம் வெகு விரைவில் சென்று விடுவோம். இனி நமது தொழில்நுட்பங்கள் மிக அதிகமான நுண்ணறிவைக் கொண்டிருக்கும்! இப்போது ஒவ்வொன்றையும் கண்டுபிடிக்க நிறைய காலம் ஆகிறது! ஆனால் இனி செயற்கை நுண்ணறிவானது மனித அறிவைப் போலவே செயல்பட ஆரம்பித்து புதிய அறிவுள்ள இயந்திரங்களை உருவாக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இயற்கையான மனிதன் யார், செயற்கை நுண்ணறிவு மனிதன் யார் என்பதைச் சொல்லவே முடியாமல் போகும்!
5. நுண்ணறிவு இயந்திரங்கள்!
வரப்போகும் காலத்தில் நுண்ணறிவு இயந்திரங்கள் – ரொபாட்டுகள் மனிதர்களுக்குச் சரி பாதியாக இருக்கும். இந்த ரொபாட்டுகள் ஒரு கட்டத்தில் மனித அறிவை விட வேகமாகச் சிந்தித்து செயல்படும்.
இப்போதே மனிதன் நூறு நாட்கள் எடுத்துக் கொண்டு ஆராயும் புள்ளி விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர் ஒரு நொடியில் அள்ளித் தந்து விடுகிறது!
இந்த புது ஜீவிகள் – ரொபாட்டுகள் நம்முடன் இரண்டறக் கலந்து நம் வாழ்க்கையையே மாற்றி விடும்!
இன்று படிப்படியாக ஆராய்ந்து கண்டுபிடிப்புகளைக் காணும் மனித குலம் ‘தாவித் தாவி’ பல அதிசயக் கண்டுபிடிப்புகளைக் காண இந்த புது ஜீவிகள் உதவும்!
4. விண்வெளி ஆராய்ச்சி இனி வரும் ஆயிரம் ஆண்டுகளில்!
இப்போது தரையில் மெதுவாக நடந்து செல்லும் மனிதன் சந்திரனுக்குச் சென்று காலடி பதித்தது உண்மை தான்! இன்னும் செவ்வாய் போன்ற கிரகங்களின் மீதும் மனிதன் பார்வையைச் செலுத்துகிறான். வருகின்ற ஆயிரம் ஆண்டுகளில் மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?
இதற்கும் ரே பதிலைத் தயாராக வைத்திருக்கிறார். இன்று பிரபஞ்ச ஆராய்ச்சியில் வெகுவாக நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இதனால் விண்வெளியில் எங்கு என்ன நடக்கப்போகிறது என்பதை முன்னதாகவே துல்லியமாகத் தெரிந்து கொண்டு விடுவோம். ஆகவே நம்மை அழிக்க எநத சக்தியாலும் முடியாது.
மனித குலத்திற்கு உதவும் வகையில் நமக்கு ஆதரவான கிரகங்கள் கண்டுபிடிக்கப்படும்! ஒருவேளை பூமிக்கு இடர் ஏற்பட்டால் இந்த கிரகங்களுக்குச் செல்லவும் தயாராகி விடுவோம். ஆனால் பூமி போல நாம் வசிக்கக் கூடிய கிரகங்கள் நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரத்தில் இருப்பது உண்மை. அப்படியானால் மனித குலம் செய்யப் போவது என்ன?

3. எதிர்கால விண்வெளிப் பயணம்!
விண்வெளிப் பயணம் எளிதாக அமையப் போகிறது; இன்று விமானப் பயணம் மேற்கொண்டு தொலை தூரங்களுக்குச் செல்வது போல விண்வெளிப் பயணமும் அனைவரும் மேற்கொள்ளக் கூடிய அளவில் பாதுகாப்புடன், குறைந்த செலவுடன் கூடியதாக ஆகி விடும் என்றார் பிரபல விஞ்ஞானி ஆர்தர் சி.க்ளார்க். இதற்கு புதிய ராக்கெட் மெஷின்கள் ஒரு புறம் உதவும் என்றாலும், இப்படிப்பட்ட பயணங்களை மேற்கொள்ளும் போது மனித உடல் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. ஆகவே நமது மரபணுக்களை விண்வெளிப் பயணத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டு விடுவோம் என்கிறார் ரே. இந்த மரபணு மாற்றம் தொலைதூர விண்வெளிப் பயணங்களை மனிதன் மேற்கொள்வதற்கு உதவும்.
2. மனிதனின் ஆயுள் நீட்டிக்கப்படுமா?
அது சரி, மனிதனின் ஆயுள் எப்படி இருக்கும் எதிர்காலத்தில்? மரபணு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் மனிதன் முதுமை அடைவதைத் தடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
மனிதனின் ஆயுளை நீட்டிக்க நேனோ டெக்னாலஜியும், நேனோ-பாட்டுகளும் உதவும் என்கிறார் ரே. இந்த நேனோ-பாட்டுகள் மனித உடலில் பயணிக்கும். முதுமையை ஏற்படுத்தும் பாதோஜன்களை அழிக்கும். முதுமை அடைவதைத் தடுத்து மரபணுக்களை அதற்கேற்ப சரி செய்யும்.
இது சம்பந்தமாக ரே கூறும் இன்னொரு கருத்து நம்மை ‘அப்பப்பா’ என பிரமிக்க வைக்கும் ஒன்று. மனித மனத்தை இன்னொரு உடலுக்கு டவுன்லோட் செய்யும் காலம் வரும் என்கிறார்! அதே மனம்- புது உடல் எப்படிப் போகிறது கதை பார்த்தீர்களா? கதை அல்ல உண்மை என்கிறார் ரே.
1. மரணம் தவிர்க்கப்பட முடியுமா?
அடுத்த இன்ப அதிர்ச்சியையும் மனித குலத்திற்கு வழங்குகிறார் ரே!
முதுமை அடைவதைத் தடுக்கப் போகிறோம் என்பதை நினைத்தாலேயே ஆனந்தம் அடையும் மனித குலத்திற்கு அடுத்து ஒரு இன்ப அதிர்ச்சியைத் தன் கணிப்பாக வழங்குகிறார் ரே!
இப்படி மனிதனின் முதுமை அடைவதைத் தடுத்து வாழ்நாள் நீடித்துக் கொண்டே போகும் நிலையில் ஒரு நாள் மரணத்தையும் வெல்லும் வழி கண்டுபிடிக்கப்படும்!
உயிருடன் பிறந்த ஒரு மனிதன் மரணத்தை நிச்சயம் எதிர் கொள்ள வேண்டும் என்பது காலம் காலமாக நிலவி வரும் கொள்கை, இது வரை இது சத்தியம்!
ரே இதை மறுக்கிறார். மரணம் என்பது நாம் நமது உறவுகளை இழந்து நமது திறமைகளையும் சக்திகளையும் உடைமைகளையும் இழக்கும் ஒன்றாக இது வரை இருந்தாலும் வேறு வழியின்றித் தவிக்கும் நிலை போய் இனி என்றும் வாழும் நிலையை உருவாக்குவோம் என்று ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறார் ரே!
மருத்துவ விஞ்ஞானமும் நேனோ தொழில்நட்பமும் இணையும் போது மரணம் வெல்லும் அற்புதம் நிகழும் என்று முன்பேயே தனது ஃபண்டாஸ்டிக் வாயேஜ்: லிவ் லாங் எனஃப் டு லிவ் ஃபார் எவர்” என்ற தனது புத்தகத்தில் அவர் சொல்லி விட்டார்.
படிப்படியாக நேனோ டெக்னாலஜி வளர்ந்து நமது உடல் உறுப்புகளை மாற்றும் தன்மையை- அதாவது பழுதானவற்றை மாற்றி நல்லனவற்றை உடலில் ஏற்றிக் கொள்ளும் தன்மையை – நல்கும்; மனித குலம் அது வரை பொறுத்திருக்க வேண்டியது தான்!
இதற்கான முதல் படியாக, நாம் நமது என்ஜைம்களை இயக்கவும் தேவையெனில் நிறுத்தி வைக்கவும் கூடிய நிலைக்கு வெகு விரைவில் வரப் போகிறோம். இதன் மூலம் பல்வேறு நோய்களை விரட்டி அடிக்கப் போகிறோம். ஆயிரத்தி எண்ணூறுகளில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 37 ஆண்டுகளாக இருந்தது; இன்று 70ஐ எட்டி விட்டது. இனி வரும் ஆயிரம் ஆண்டுகளில் மனிதன் சிரஞ்சீவியாக இருப்பான் என்கிறார் ரே.
நல்ல கதை என்கிறது இதைக் கேட்ட சாமான்யனின் மனம். ஆனால் ஏராளமான விருதுகளைப் பெற்று பல அறிவியல் கணிப்புகளை மெய்யாக்கிக் காட்டிய ரேயோ சிரித்தவாறே “நம்புங்கள், நான் சொல்வது கதை நிஜம்” என்கிறார்.
இதுவரை ரே கூறியுள்ள பிரமிக்க வைக்கும் 147 கணிப்புகளில் மூன்று தவிர மற்ற அனைத்தும் பலித்து விட்டன என்பதை எண்ணிப் பார்த்தால் ரேயின் அறிவியல் கணிப்புத் திறனை எளிதில் உணர முடியும்.
காலம் ரேயின் கணிப்புகளுக்கு சிறப்பான பதிலை கூறும்!
tags- மரணம், வெல்லும், ரேமாண்ட் கர்ஸ்வெய்ல்
***
