Thursday, 14 January 2016

சிறந்த பக்திக்கு அடையாளம்!! கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர்.

சிறந்த பக்திக்கு அடையாளம்!!

ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர்.

ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர்.

அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது. அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள்.
ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி.
அதற்கு அவள் கணவன்,
அப்படி செய்யக் கூடாது. கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர். நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம். இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி, சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம்.
கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும். அதன் வழியாக அக்கரை சேரலாம்... என்றான்.
அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால்,
அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார். உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான்.
அதற்கு ஹரதத்தர்,
அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை. காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை. வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை. நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர்.

இது, சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி, சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம்.
இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா? இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது.
எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால், நாளடைவில், மனம் பக்குவப்படும்.

சீறுகின்ற காளை… அதை அடக்குகின்ற வேளை… தமிழர்களை மகிழ்விக்கக் கூடிய பண்டிகைகளில் இன்றியமையாதவை உழவர் திருநாளும், சித்திரைத் திருநாளும்.

சீறுகின்ற காளை… அதை அடக்குகின்ற வேளை…
தமிழர்களை மகிழ்விக்கக் கூடிய பண்டிகைகளில் இன்றியமையாதவை உழவர் திருநாளும், சித்திரைத் திருநாளும்.
ஆண்டில் ஒரு நாள் கொண்டாடக் கூடிய விடயம் பண்டிகை என நம் அனைவருக்கும் தெரியும். மாதம் முழுவதும் கொண்டாடப்படும் விடயம் என்னவென்று தெரியுமா…?
ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு தான் அது. தைத் திங்கள் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பதை இறுதியில் அலசுவோம்.
ஜல்லிக்கட்டு – பெயர்க் காரணம் :
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, “சல்லி காசு” எனப்படும் நாணயங்கள் உபயோகத்தில் இருந்தன. இந்த நாணயங்களை காளையின் கொம்பில், ஒரு துணியில் போட்டு கட்டி விடுவார்கள். இதைத் தான் “சல்லி கட்டு” என்றழைத்தனர். இந்த சல்லி கட்டு போட்டியின் முடிவில் வெல்லும் வீரருக்குச் சொந்தமாகும். ” சல்லி கட்டு” என்பதே மருவி பின்னாளில் ” ஜல்லிக்கட்டு” என்றானது.
தோற்றம் :
சிலம்பில் ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகள் காணக் கிடைப்பதால், இவ்வீர விளையாட்டு இரண்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னரே தோன்றியிருக்கலாம் என்பது நம் கருத்து. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், அதாவது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஜல்லிக்கட்டு இருந்து வந்திருக்கிறது. பாண்டியர்களின் நாள்காட்டியில் இந்த விழா பற்றிய குறிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏறு தழுவுதலை தேசிய விளையாட்டாகக் கொண்ட ஸ்பெயின் நாட்டில் கூட 15ஆம் நூற்றாண்டிலிருந்துதான் “Bull Bitting” என்ற பெயரால் குறிக்கப்பட்டு இவ்விழா தொடர்ந்து நடத்தப்படுகிறது என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு – வகைகள் :
ஜல்லிகட்டில் இரண்டு வகைகள் உள்ளன. வாடிவாசல், வெளிவிரட்டு என்பன அவ்விரண்டு வகைகள். முன்னதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. பின்னது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. பின்னதில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும், யாரைத் தூக்கும் என்று தெரியாது. அந்த இடம் ஒரு யுத்தகளத்தை ஒத்திருக்கும்.
சிறுவயல், பலவான்குடி, திருப்பத்தூர், வேந்தன்பட்டி, ஆத்தங்குடி, வெளுவூர் என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டுகள் வெளிவிரட்டு வகையைச் சேர்ந்தவை.
ஜல்லிக்கட்டு – என்ன? எப்படி? :
இந்த ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார்படுத்துவதே ஒரு தனிக்கலை எனலாம். இந்தக் காளைகள் எந்த வேலையும் செய்வதில்லை. இவற்றிற்கு பச்சரிசி மாவும், நவதானியங்களும் உண்ணக் கொடுக்கப்படுகின்றன. மேலும், இந்தக் காளைகள் சற்றேறக் குறைய வளர்ப்பவரின் குணத்தைக் கொண்டிருக்கும். இந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் விளையாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் சாதுவாகவே இருக்கின்றன. அதாவது, இவற்றிற்கு இது விளையாட்டு என்பது தெரிந்தே இருக்கிறது.
மேலும், விளையாட்டினூடே மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே விளையாட்டை நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்துவிடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள் பரிசுப்பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள்.
இலக்கியச்சான்றுகள் :
கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே,ஆயமகள்’ (கலி.முல்லை.103 63-64)
அதாவது, ஏறு தழுவும் ஆண்களை பண்டைக் காலப் பெண்டிர் விரும்பி மணந்தனராம். ஆயர்குலப் பெண்டிர் தெருவில் பால் மற்றும் பால் பொருட்களினை விற்கும் பணியினை அந்நாளில் மேற்கொண்டிருந்தனர். அவ்வாறு தெருவில் அப்பெண் நடந்து செல்லும்போது, இவளின் கணவன் ஏறுதழுவிய வீரன் என அறிந்து மற்ற ஆண்களெல்லாம் அப்பெண்ணிடம் மரியாதையுடனே நடந்துகொள்வராம். அந்நாட்களில் திருமணம் முடிப்பதற்கு ஒரு ஆடவன் ஏறு தழுவியிருக்க வேண்டுமென்பது முக்கியத் தகுதியாகும். இவ்வாறாக முல்லைக் கலி எடுத்தியம்புகிறது.
இந்த ஏறுதழுவுதல் முல்லை நில மக்களால் மட்டுமே போற்றப்பட்ட விளையாட்டு என விவாதம் வைப்பவர்கள் சிலர். அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட செய்யுளைப் படித்தால் உண்மை நிலையறியலாம்.
‘இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை’ (மலை.330-335)
– மலைபடுகடாம்.
குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர் என்பதே இச்செய்யுளின் பொருள்.
இவ்வாறே சிலம்பும்,
‘மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக்
முல்லையம் பூங்குழல் தான்’ (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8)
வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சுட்டுகிறது.
இன்றைய நிலை :
இன்றும் ஜல்லிகட்டு நடந்தக்கூடாதென்று நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. வாதபிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. ஜீவகாருண்ய நிறுவனங்கள் போராடுகின்றன. ஆனால் இந்த விளையாட்டின் பின் மனிதர்க்கு உள்ள மனப்போக்கும், மாடுகளைச் சண்டைகளுக்குத் தயார் படுத்தும் விதமும், அதன் இலக்கியத் தொன்மையும் இது வெறும் வெறியூட்டும் விளையாட்டில்லை என்றே உணர வைத்துள்ளது. அதே நேரம், பணத்திற்காக வெளி நாட்டினர் முன்பாக காளைச் சண்டைகளை நம்மவர்கள் நடத்துவதையும் ஏற்பதற்கில்லை.
ஸ்பெயினில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன. குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தவாறே தான் உள்ளது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தபட்டிருக்கின்றன. மட்டுமன்றி மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் மிக மிகக் குறைவே. எல்லா வீரக்கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை.
என்ன செய்யலாம் ? :
நடத்தப்படும் வீர விளையாட்டு ஆறறிவு கொண்ட காளையோடல்லாமல் ஐந்தறிவு கொண்ட காளையோடே என்றறிந்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு இவ்விளையாட்டை அனுமதிக்கலாம்.
காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும்,சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும்,மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை.
தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதலை மறக்காமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் கவனம்செலுத்த வேண்டும்